Friday, August 29, 2014

பார் போற்றும் தமிழர்கள்


சென்ற பதிவில் கோவில்கள் தமிழரின் சிறப்பை உலகமறியச் செய்தன என கூறி இருந்தேன். அதற்கு சான்று கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட். உலகிலேயே மிகப்பெரிய சமய வழிபாட்டுத் தலம் அங்கோர் வாட் ஆகும். இதன் சுற்றுபுற மதில்களில் ஒரு புறத்தின் நீளம் மட்டும் 5.5 கிலோ மீட்டர் ஆகும். சுமார் இருநூறு ஏக்கர் பரப்பளவில் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது.  இதனை கட்டியவர் ஒரு தமிழ் மன்னன் ஆவார். அவரே சூரியவர்மன். ஆதவன் எவ்வாறு அனைத்து உயிர்களுக்கும் முதன்மையாக விளங்குகிறதோ அது போல் சூரியவர்மன் கட்டிய இக்கோவில் உலகில் உள்ள சமய வழிபாட்டுத் தலங்களிற்கு முதன்மை என்றால் அது மிகையாகது. உலகத்தார் அனைவரும் வியப்பது யாதெனில், இந்த மாபெரும் கோவில் பன்னிரண்டாம் நூற்றாண்டு கால கட்டத்தில் வெறும் இருபத்தி ஏழு ஆண்டுகளில் கட்டப்பட்டது என்பதே ஆகும்.இன்றைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இதனை கட்டியிருந்தாலும்  அதை கட்டி முடிக்க 150 வருடங்கள் ஆகும் என கணக்கிடப்பட்டுள்ளது.அத்தகைய மாபெரும் கட்டுமானத்தை இவ்வளவு குறுகிய காலகட்டத்தில் கட்டிய அக்கால தொழில்நுட்பம் என்னவென்று  இன்றவும் அறியப்படவில்லை. கம்போடியா நாட்டின் கோடியிலும் அங்கூர் வாட்டின் பிரம்மாண்ட கோவில் இடம் பெற்றுள்ளது.
அங்கூர் வாட் கோவில்
நம்மவர்களின் கோவில்கள் அங்கூர் வாட்டில் மட்டுமல்லாது. தாய்லாந்து, ஸ்ரீ லங்கா, இந்தோனேசியாவின் பாலி தீவு ஆகியவற்றிலும் உள்ளது. பழந்தமிழர் தாம் சென்ற இடமெல்லாம் நம் கோவில்களையும், நம் கலைகளையும் பரப்பினர் .நம் மேன்மையை உணர்ந்து 13 ஆம் நூற்றாண்டில் ஒரு சீன மன்னர் ஒருவர் தம் நாட்டில் குவான்சோ என்ற இடத்தில் தமிழக வணிகர்கள் அமைத்த சிவன் கோவிலுக்கு இறையிலிகளை அளித்துள்ளான்.
சீன குவான்சேயில் தமிழர்கள் கட்டிய கோவில்

இக்கோவிலை சுற்றி மிகப்பெரிய அகழி வெட்டப்பட்டுள்ளது. இது போல் தமிழகத்தின் பல கோவில்களிலும் அகழிகள் வெட்டப்பட்டுள்ளன. மன்னர்கள் தாம் ஆளும் பகுதியின் சொத்துக்களை கோவில்களிலேயே பாதுகாப்பாக வைப்பர். இதன் காரணமாக எதிரி நாட்டு மன்னர்கள் போரின் போது கோவில்களையே முற்றுகை இடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இது போன்ற அந்நியர்களின் படையெடுப்புகளில் இருந்து நாட்டின் சொத்துக்களை பாதுகாக்க மன்னர்கள் தற்காப்புக் கலைகளைப் பயன்படுத்தினர். கோவிலை சுற்றி பெரும் அகழிகள் வெட்டப்பட்டு, நீர் நிரப்பி, அதில் முதலை போன்ற விலங்குகளை வளர்ப்பர். மேலும் இது போன்ற அகழிகள் அப்பகுதியின் நிலத்தடி நீரின் வளத்தைப் பெருக்கவும் உதவி செய்துள்ளன.
அங்கோர்வாட்டினை சுற்றியுள்ள மாபெரும் அகழி


தமிழர்களின் தற்காப்பு கலைக்கு மேலும் பல சான்றுகள் உள்ளனகோவில்களில் கல்திரை எனும் அமைப்பையும் மன்னர்கள் பயன்படுத்தியுள்ளனர். கற்கோவிலில் ஒரு குறிப்பிட்ட கல்லை மட்டும் சில ரகசிய அறைகளுக்கு வாயிலாக அமைத்து, அதன் மூலம் நாட்டின் சொத்துக்களை பாதுகாத்துள்ளனர். அந்த கல்திரையும் மன்னன் உட்பட முக்கிய நபர்களுக்கே கூறுவர். தமிழர்களின் தற்காப்பு கலையினை இருபதாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களும் பயன்படுத்தினார்கள் என்றால் அது மிகையாகாது. ஆர்காடு நவாப்கள் ஹைதர் அலியினை துரத்திய பொழுது, அவரை திருச்சி மாநகரின் ஆளுநராக இருந்த இராபர்ட் கிளைவ் மலைக்கோட்டை கோவிலினுள் மறைந்து வாழ வைத்தார். சுரங்க பாதை போன்றவற்றையினையும் மன்னர்கள் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் அவை அனைத்தும் இப்போது மூடப்பட்டுவிட்டன.

மன்னர்கள் தங்கள் உயிரினும் மேலாக கோவில்களைக் கருதியுள்ளனர். அதற்கு சான்று ஆங்கிலேயர்கள் மருது சகோதரர்களைக் கைது செய்யும் பொருட்டு காளையார் கோவில் கோபுரத்தை இடிப்போம் எனும் அறிக்கை விட்டவுடன், தன் உயிரினையும் பொருட்படுத்தாது பாரம்பரிய சின்னம் காக்க ஆங்கிலேயரிடம் சரணடைந்தனர் மருது சகோதரர்கள். இவை அனைத்தும் கோவில்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே இருக்கும் ஆத்ம உறவினை காலம் அழியும் வரை பறைசாற்றும் விடயங்கள் ஆகும்.
காளையார் கோவிலும், மருது சகோதரர்களும்



அடுத்த பதிவில் கோவில் எவ்வாறு உருவானது எனக் காண்போம்.

கோவிற்கலை- வளரும்.
மேலும் அறிய:
தமிழ் விக்கிப்பீடியா,
ஆங்கில விக்கிப்பீடியா

Sunday, August 3, 2014

முன்னுரை

கோவிற்கலையும், கோவிலும் தமிழர்களின் வாழ்வியலில் இன்றும் இன்றியமையாத இடத்தைப் பிடித்துள்ளது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு தமிழக அரசின் இலச்சினையாகும். கோவிற்கலை என்பது ஆதி காலம் தொட்டு தமிழனின் ஆறாவது அறிவினில் உதித்த பல கலைகளைத் தன்னகத்தே வைத்துக்கொண்டதாகும்கோவிற்கலை என்பது கோவிலின் கட்டிட அமைப்பைப் பற்றியது மட்டும் அன்று.

 1. கோயிற் கட்டிடக்கலை,
 2. சிற்பக்கலை,
  •               படிமக்கலை,
  •     வாகனக்கலை   ,
 3. ஓவியக்கலை,
 4. இசைக்கலை,
       ·         தேவாரப் பண்ணிசை,
       ·         நாதசுரம்/தவில்
       ·         பக்திப் பாடல்கள்
       ·         சமயச் சொற்பொழிவுகள்,
       ·         வில்லுப்பாட்டு,
 5. ஆடற்கலைகள்,
 6. சாத்துப்படிக்கலை,
 7. உலோகக்கலை
          ·         விளக்குகள்,
          ·          மணிகள்,
          ·         உலோக சிலைகள்,
 8. தற்காப்புக்கலை,
 9. நிர்வாகக்கலை.
என மேற்கூறிய யாவும் கோவிற்கலைகளுனுள் ஒன்றோடு ஒன்றாக பின்னிப்பிணைந்தவை ஆகும்.

தனது அன்றாட வாழ்வின் நிகழ்வுகளையும் முன்னோர்கள் கோவில்களில் பதிவு செய்துள்ளனர். கடவுளுக்கு என்ன உணவளிக்க வேண்டும், எவ்வளவு எனத் தொடங்கி பெற்ற பரிசு, வென்ற நாடு, நடந்த யுத்தம் முதலிய அனைத்தையும் கோவில்களில் கல்வெட்டுகளாக பதியப்பட்டன. 
போரினை விளக்கும் நுணுக்கமான சிற்பம்

இதைத் தவிர மருத்துவக் கலையும் கோவில் கட்டுமானத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளது. ஒவ்வொரு கோவிலின் சிலைகளும் குறிப்பிட்ட நோயினை குணப்படுத்தும் வகையில் மருத்துவ குணமுடையதாய் அமைக்கப்பட்டிருக்கிறது. இவ்வகையில் அமைக்கப்பட்ட கோவில்களுக்கு சிறந்த உதாரணம் பழனி முருகனின் நவபாசான மூலவர் சிலையாகும். கோவில்கள் மட்டுமின்றி கோவில் தேர்களிலும் நம் முன்னோர்கள் மருத்துவக்கலையினை பயன்படுத்தியுள்ளனர். அதன் காரணமாக அனைத்து தேர்களையும் மூலிகையான இலுப்பை மரத்தில் செய்துள்ளனர்.

கோவில்கள் அக்காலங்களில் வழிபாட்டிற்கு மட்டும் கட்டப்பட்டவை அன்று. அவை நம் முன்னோர்களின் வாழ்வியலில் முக்கிய இடத்தில் இருந்துள்ளன. பண்டைய காலத்தில் கோவில்கள் சமுதாயக் கூடங்களாகத் திகழ்ந்துள்ளன. நம் முன்னோர்கள் தமது சொத்துக்களையும், நிலங்களையும் கோவில்களுக்கு தானமாக வழங்கினர். மன்னர்களும் தாம் வென்று வந்த தேசங்களின் பொன்னையும், பொருட்களையும் கோவில்களுக்கு தானமாக வழங்கினர். சிலர் இவற்றிற்கெல்லாம் மேலாக தனது இன்னுயிரையும் கோவில்களுக்காக அர்பணித்துள்ளனர். அதற்காக அவர்களுக்கு நவகண்டம் எனும் சிலைகளை வடித்து மக்கள் சிறப்பித்துள்ளனர்.

அக்காலத்தில் கோவில்கள் என்பது மனிதனின் அனைத்து கலைகளையும் வளர்த்துக் கொள்ளவும், வெளிப்படுத்தவும் ஏதுவான இடமாக இருந்துள்ளது. பொதுமக்களுக்கு அறிவை புகட்டும் இடமாகவும் கோவில்கள் திகழ்ந்துள்ளன. அனைத்துக் கவின் கலைகளும் மன்னன் வாழுமிடமான அரண்மையில் அல்லாமல் கோவில்களிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளன. மன்னர்கள் கோவில்களை தமது கருவூலங்களாகப் பயன்படுத்தியுள்ளனர். பெரும் சான்றோர்களையே அதற்கு நிருவாகிகளாக அரசர்கள் நியமித்துள்ளனர். கோயில்களின் மூலமாக வறியோர்களுக்கு அன்னமிடல், இளைப்பாற இடமளித்தல் என நற்காரியங்களையும் செய்துள்ளனர் நம்முன்னோர்கள்.

பாரம்பரியத்தையும், பண்பாட்டினையும் பேணிக்காக்கும் இடமாகவும் கோவில்கள் திகழ்ந்துள்ளன. கோவில்களில் நம்முன்னோர்கள் பல அறிவியல் திறனையும் வெளிப்படுத்தியுள்ளனர். அந்த அறிவியல் பின்னணியினை அவர்கள் கண்டுபிடித்தது எப்படி, எதை கொண்டு அறிந்தார்கள் என்பன இன்று வரை விடைக்காண முடியாத கேள்விகளாகும். இதற்கு எடுத்துக்காட்டாக பஞ்சபூத தலங்களில் மூன்று கோவில்களான திருக்காளத்தி கோவில், சிதம்பரம் நடராசர் கோவில், காஞ்சி ஏகாம்பரேசுவரர் கோவில் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பதையும், தில்லை நடராசரின் உருவம் அணுவின் சுழற்சியை ஒத்து இருப்பதையும், புவியின் காந்தபுல ரேகையின் மையப்பகுதியில் சிதம்பரம் நடராசர் கோவில் அமைந்து இருப்பதனையும் கூறலாம். மேலும் நடராஜனின் நடனம் பிரபஞ்ச நடணம் என அழைக்கப்படுகின்றது. இதன் காரணமாக பிரபஞ்சத்தின் இரகசியம் கண்டுபிடிக்க ஐரோப்பாவில் கட்டப்பட்டுள்ள சி.ஐ.ஆர்.என் ஆய்வகத்தில் சிவனின் நடராஜர் சிலையும் வைக்கப்பட்டுள்ளது.
அணுவின் சுழற்சியை ஒத்த சிவனின் நடணம்.
சி.ஐ.ஆர்.என் இல் வைக்கப்பட்டுள்ளது இச்சிலை.


அத்துடன் நில்லாமல் சனி கோளின் கதிர்கள் பூமியில் சரியாக விழுமிடத்தில் சனிபகவானுக்கு உகந்த திருநள்ளாறு கோவிலை அமைத்திருகின்றனர். மேலும் பத்தொண்பதாம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதனின் பரிணாம வளர்ச்சியினை திருமாலின் தசவதாரங்கள் மூலம் கூறிய பெருமையும் நம் முன்னோர்க்கே சென்று சேரும். இத்துணை நன்மைகளை தன்னகத்தே  கொண்டதன் காரணமாக கோவில் இல்லா ஊரில் குடி புக வேண்டாம் எனும் பழமொழியும் உண்டாயிற்று.

இது போல் தமிழனின் சிறப்பை உலகிற்கு எடுத்துச்சென்ற கோவிற்கலைகளைப்பற்றி இனிவரும் பதிவுகளில் காண்போம்.


கோவிற்கலை வளரும்
மேலும் அறிய:
தமிழ் விக்கிப்பீடியா,
ஆங்கில விக்கிப்பீடியா,
https://sagotharan.wordpress.com

கோவிற்கலைகள்

பாவைக் கூத்துக்கள் பொம்மலாட்டங்கள்
கோவில் சிற்பத்தில் கலை வளர்ப்போம்

என்ற நா.முத்துகுமாரின் பாடல் வரிகள் மூலம் தமிழரின் கலைகள் பற்றி அறிந்த தொடக்கக்காரர்களும், தமிழர்களின் கலைப் பற்றி அறிய விரும்பும் இளைஞர்களுக்கும் எனக்கு தெரிந்தவற்றை பகிர்ந்துக்கொள்ளவே இவ்வலைப்பூ ஆகும்.

மதராசப்பட்டிணம் திரைப்படத்தின் காட்சி

கோவில் என்பது நமது பண்பாட்டில் முக்கிய இடத்தை பிடித்த கலைக்களஞ்சியமாகும். அதற்கு நாம் நிறைய உதாரணங்களைக் கூறலாம். இந்த நூற்றாண்டிலும் ஒருவரை சிறப்பு செய்ய கோவில்களைக் கட்டுகின்றோம். உதாரணமாக நயன்தாராவிற்கு கோவில் கட்டியதை கூறலாம். 

கோவில்= கோ + இல்
’கோ’ என்பது இறைவன், அரசன் ஆகியவற்றை குறிக்கும் சொல் ஆகும். ’இல்’ என்பது இல்லம், வாழுமிடம் எனும் பொருட்படும் சொல் ஆகும். இறைவனின் இல்லம் என வழங்குவதே கோவிலாகும். பண்டைய காலத்தில் கோவிலினை அம்பலம் என்றும் கூறுவர்.

நமது பாரத தேசத்திற்கும், கோவில்களுக்கும் உள்ள ஆத்ம உறவினைப் பற்றி ஒரு சில வரிகளில் விளக்க முடியாது. அனைத்திலும் கோவிலை முன்னிருத்தியது நமது பாரத நாடு ஆகும். அதற்கு ஓர் உதாரணம் கூற வேண்டுமெனில் இந்திய நாடாளுமன்றத்தினை கூறலாம். இந்திய நாடாளுமன்றம் ஒரு கோவிலின் முன் மாதிரி கொண்டே கட்டப்பட்டதாகும். ஜாபல்பூரில் உள்ள 8 ஆம் நூற்றாண்டின் யோகினி கோவிலை மாதிரியாகக் கொண்டே நமது நாட்டின் முக்கிய அரசியல் கட்டிடம் கட்டப்பட்டது. மேலும் இந்தியாவில் 70 சதவிகித ஊர்களின் பெயர்கள் அப்பகுதியில் உள்ள கோவில்களின் வரலாற்றை ஒத்தே வைக்கப்பட்டுள்ளன.
யோகினி கோவில்

இவை மட்டுமல்லாது பல வியக்கத்தக்க வரலாறுகளும் கோவில்களில் இருந்துள்ளன. உதாரணம் கூற வேண்டும் எனில் குஜராத்தின் சோமநாதரின் ஆலயத்தில் இருந்த சிவ லிங்கமானது தரையைத் தொடாமல் கற்ப கிரகத்தில் மிதந்து கொண்டு இருக்குமாம். அனைவரும் அறிந்த  காந்த விலக்கமே அதன் காரணம். எதிர் எதிர் புலம் கொண்ட காந்தங்கள் விலகிச் செல்லும் எனும் கோட்பாட்டை வைத்து கோவில்கள் எழுப்பியுள்ளனர். கர்நாடகா மாநிலத் தாலகாடில், காவிரிக்கரையில் புதையும் மணலில் கட்டப்பட்ட கற்றிளி, கும்பகோணத்தில் உள்ள கடல் நுரையால் செய்யப்பட்ட வழஞ்சுழி விநாயர் சிலை  ஆகியன வியக்கத்தக்க கோவில்களில் சிலவாகும். இவற்றிக்கு மேல் சுவாரசியமான கோவில் ஒன்று உள்ளது. அது கேரள மாநிலத்தில் உள்ள ஒச்செரியில் இருக்கும் பரபிம்மன் ஆலயமாகும். முப்பத்து ஆறு ஏக்கர் வெற்று நிலம், ’அனைத்துமே அவன்’ என்று கூறும் பரபிரம்மனுடைய கோவிலாகும். இது போன்று நம் முன்னோர்களின் கலைச் சுரங்கத்தை  அறிய முற்படுவோம்வாருங்கள்.

ஒரு மரத்தை வெட்ட கோடாரியினை நன்கு பட்டைத் தீட்டுவது எவ்வளவு முக்கியமோ, அதே போல் கோவிற்கலைகள் பற்றி அறிய கோவில் என்பது யாது, எவ்வாறு தோன்றியது, கோவில்கள் இவ்வளவு சிறப்புற்று விளங்குவதற்கான காரணங்கள் ஆகியவை அறியப்பட வேண்டிய விடையங்கள் ஆகும். முதல் இரு பதிவில் அதைப்பற்றி காண்போம்!...