Wednesday, September 10, 2014

சிற்பக்கலை

ஆதி காலத்திலிருந்தே தமிழர்கள் உருவ வழிபாட்டிணை செய்தவர்களாவர். அக்காரணத்தினால் சிற்பக்கலை தமிழக கோவில்களில் ஒரு சிறந்த இடத்தைப் பிடித்தது. சிற்பக்கலை என்பது அறுபத்து நான்கு ஆயக்கலைகளில் ஒன்று ஆகும். பல பொருட்களில் சிற்பங்களை உருவாக்க முடியும் எனும் காரணத்தால், மற்ற கலைகளைக் காட்டிலும் சிற்பக்கலை நன்கு வளர்ச்சியினை அடைந்தது. சிற்பங்கள் மண், சுடுமண், சுதை, தந்தம், உலோகம், கற்கள் , மரங்கள் ஆகிய அனைத்து பொருட்கள் கொண்டும் சிற்பங்கள் உருவாக்கப்பட்டன. கோவில் விமானங்கள், கோபுரங்கள் ஆகியன சிற்பக்கலையினை வளர்க்க உதவிய கட்டிட அமைப்புகளாகும். சிற்பங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பன பற்றி சிற்ப சாஸ்திரம் எடுத்துக் கூறுகின்றன.

இத்தகு கவின் கலை கற்களால் கோவில்கள் அமைக்க ஆரம்பித்த பின்னரே நிலைபேர் அடையத் தொடங்கின. அதன் முன்னர் சிற்பங்கள் மண் மற்றும் சுதை கொண்டு உருவாக்கப்பட்டன. மண் கொண்டு சிற்பங்கள் செய்பவர் மண்ணீட்டாளர் என்று அழைக்கப்பட்டனர். அதன் பின் சுடு மண் சிற்பங்கள் சிறப்படையத் தொடங்கின. 'சுடுமணோங்கிய நெடுநகர் வரைப்பின்' எனும் பெரும்பாணாற்றுப்படை பாடலின் மூலம் சுடுமண் சிற்பங்கள் பற்றி  அறியலாம். பின் மரச்சிற்பங்களும் சிறப்படையத் தொடங்கின. கடவுளின் மூலவர் சிலையும் மரத்தில் செய்து வழிபடப்பட்டன. சுதை சிற்பங்களும் மண்ணாலான சிற்பங்களைப் போலவே சிறப்பானதாகக் கருதப்பட்டது. சுண்ணாம்பு, கரும்புச்சாறு, வெல்லச்சாறு, நெல்லிக்காய்ச்சாறு ஆகியன கொண்டு வஞ்சிரம் தயாரித்து சுதை சிற்பங்கள் உருவாக்கப்படன. காவிரிப்பூம்பட்டினத்தில் தொல் பொருள் ஆய்வாளர்கள் இத்தகு சிலைகளை கண்டெடுத்துள்ளனர். பல்லவர் மற்றும் சோழர்களும் இத்தகு சுதை சிற்பங்களை கோபுரங்கள் மற்றும் விமானங்களில் பயன்படுத்தியுள்ளனர். இவை அனைத்தின் மூலமும் கலை வளர்ந்திருந்தாலும், இயற்கை சீற்றங்கள், கால ஓட்டம் ஆகியவற்றினால் இச்சிற்பங்கள் விரைவில் அழிவை சந்தித்தன. அக்குறையை போக்க வந்தவையே கற்சிற்பங்களாகும்.

கற்சிற்பங்கள்:
சங்ககாலத்திலேயே கற்சிற்பங்கள் செய்யப்பட்டிருந்தாலும் பல்லவர் காலத்தின் பிறகே இவை வளர்ச்சி பாதையில் செல்லத் தொடங்கின. குடைவரைக் கோவில்களில் ஓரளவு அற்புதத்தை வெளிப்படுத்திய புடைப்புச் சிற்பங்கள் ஒற்றைக்கல் இரத்தில் பிரம்மிப்பை ஏற்படுத்தும் அளவிற்கு வளர்ந்தன.பல்லவர் காலத்தை அடுத்து சோழர்காலத்தில் கற்சிற்பங்கள் நளினத்தையும், சிற்பக்கலையில் ஏற்பட்ட முன்னேற்றத்தினையும் கொண்டு  விளங்கின.

சிற்பங்களின் வகைகள்:

  • புடைப்புச் சிற்பம்,
  • முழு சிற்பம்

புடைப்புச் சிற்பம்

புடைப்பு சிற்பம் என்பது ஒரு பகுதி மட்டும் சிற்பமாக செதுக்கப்பட்டிருக்கும் அமைப்பு ஆகும். முழு சிற்பம் என்பது முப்பரிமான சிலையாகும்.புடைப்புடச் சிற்பங்கள் குடைவரை, கோவில் தூண்கள் ஆகியவற்றில் காணப்படும். மூலவர் சிலை போன்றன முழு சிற்ப வகையைச் சேர்ந்தது ஆகும்.

நிலைத்து ஒரே இடத்தில் இருக்கும் சிற்பம் கொடுமையான போரினையும், அதனால் ஏற்படும் விளைவினையும் எடுத்து கூறும் வல்லமைப் பெற்றது ஆகும். தமிழர்களின் சிற்பங்கள் உலகத்தவரின் சிற்பங்களிலிருந்து வேறுபட்டது ஆகும். நடன அசைவுகள், முக பாவனைகள் ஆகிய அனைத்தும் நம்முன்னோர்களின் சிற்பங்களில் காணப்படுகின்றன. கல்லில் உருவாக்கப்பட்ட சங்கிலி, கிளியின் வாயில் உருளும் பந்து ஆகியன தமிழர்களின் நுணுக்கமான கலைத்திறனுக்கு எடுத்துக்காட்டாகும். மாமல்லபுரத்தில் உள்ள நீர் தோக்கத் தொட்டி சரியாக வட்டவடிவில் இருப்பதும், தஞ்சை பெரிய கோவிலின் சுற்று சுவரில் உள்ள சிறு சிறு துளைகளும் பிரம்மிக்க வைக்கும் கலை நுணுக்கங்களாகும்.   மேலும் உலகமே வியக்கும் அர்சுணன் தவமும் பல்லவரின் சைற்பக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். சுவரோவியம் போல இதில் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
வட்டவடிவில் இருக்கும் நீர்த்தேக்கம்

திருநெல்வேலி கிருஷ்ணாபுரத்தில் உள்ள மன்மதரின் சிலையூம் இது போன்ற பிரம்மிக்க வைக்கும் சிற்பக்கலையை தன்னகத்தே வைத்திருந்த சிலையாகும். இக்கோவிலில் கல்லால் செய்யப்பட்ட மன்மதன் வைத்திருக்கும் கரும்பு உண்மையான கரும்பினைப் போல் வளைந்து இருப்பதனையும், கரும்பின் இடையில் குண்டூசி செல்லும் அளவு சிறு துளை இறுதி வரை சென்றிருப்பதையும் உடைந்த பிறகு அறிந்து கொண்டது நமது போதாத காலமாகும்.
தஞ்சைப் பெருவுடையார் கோவிலில் உள்ள சிறு துளைகள்

மேலும் சிற்பக்கலையினைப் பற்றி அடுத்தப்பதிவில் காண்போம்.

கோவிற்கட்டிடக்கலை – பாகம் 3

கோவிலின் பொதுவான கட்டிட அமைப்பு சென்ற இரு பதிவுகளில் பார்த்தோம். இப்பதிவில் ஒவ்வொரு மன்னனின் ஆட்சியிலும் எவ்வகை மாற்றங்கள் கோவில் கட்டிடக் கலையில் புகுந்தன என்று காண்போம்.

கி.மு ஆயிரம் முதல் கி.பி 300 வரை ஆண்ட முற்கால சோழர், சேரர், பாண்டியர் ஆகியோர் செங்களினால் கோவில்கள் கட்டினர். அவர்கள்  ஏழு வகைக் கோவில்களையே கட்டியுள்ளனர். அவற்றில் பெரும்பாலும் மாடக்கோவில்களே கட்டப்பட்டன. ஆனால் கூறிப்பிடதக்க மாற்றங்கள் ஏதும் கோவில் கட்டிடக்கலையில் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

தமிழக கோவில் கட்டிட அமைப்பை காலத்தையும், ஆட்சி புரிந்த மன்னர்களையும் வைத்து சில வகைகளாகப் பிரிக்கலாம். அவை
மன்னர்கள் - காலம்(கி.பி)
பல்லவர் – 600-900
சோழர் – 900-1150
பாண்டியர் – 1100-1350
நாயக்கர் – 1600 க்கு மேல்

பல்லவர் கால கட்டிடக்கலை;


தமிழகத்திற்கு செங்கல், மரம், உலோகம் இல்லா கோவில்களை அறிமுகப்படுத்திய பெருமை பல்லவர்களையே சேரும். குடைவரைக் கோவில்கள், ஒற்றைக்கல் கோவில்கள், கற்றளிகள் ஆகிய அனைத்தினையும் இவர்கள் அறிமுகம் செய்து அதில் குறிப்பிட்ட வளர்ச்சியினையும் பல்லவர்கள் அடைந்துள்ளனர்பல்லவர் கால குடைவரைகளில் கடவுளின் சிலை இல்லாமலேயே காட்சி அளிக்கும். ஆனால் கடவுளின் சிலை வைக்க மூன்று அறை போன்ற அமைப்புகள் வெட்டப்பட்டு இருக்கும். இது போன்று பல குடைவரைகளுக்கு பிறகே கடவுளின் சிலை வைத்து பல்லவர் கோவில்கள் கட்டப்பட்டன. குடைவரைக் கோவில்களை விசித்திர சித்தனான மகேந்திரவர்மன் முதன் முதலில் கட்டத்தொடங்கினான். இது தென்னிந்திய கோவில் கட்டிடக்கலையின் மைல்கல் ஆகும். அதன் பிறகே திராவிடக் கட்டிடக்கலை வளர்ச்சியினைப் பெறத் தொடங்கியது. பல்லவர்கள் கட்டிடக்கலையின் உச்சம் என காஞ்சி கைலாசநாதர் கோவிலினையும், மாமல்லபுரம் கடற்கரைக் கோவிலினையும் கூறலாம்

சோழர்காலம்:
சோழர் காலம் கோவில் கட்டிடக்கலைக்கு பொற்காலமாகும். முன்பே
தஞ்சை பெருவுடையார் கோவில்
 
அறிமுகம் ஆகியிருந்த கற்றளிகள் சோழர்காலத்திலேயே உச்சத்தை அடந்த்து. பல்லவர்களைப் போலவே, ஒவ்வொரு சோழ மன்னரின் காலத்திலும் கோவிற்கலை சில மாறுதல்களைச் சந்தித்துள்ளது. ஒவ்வொருவரின் ரசனைக்கு ஏற்றவாறு கோவில் கட்டிட அமைப்பில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. உதாரணமாக இராஜராஜன் பிரம்மாண்டத்தின் பிதாமகன், இரண்டாம் இராஜராஜன் கலைநுணுக்கங்களின் காதலன். சோழர்கள் புவியின் பரப்பில் குமிழிகள் போல பலக் கோவில்கள் கட்டினர். அதன் காரண கர்த்தா, உத்தம சோழனின் தாயான சேரன்மா தேவி ஆவார். இவர் இராஜராஜனின் காலம் வரை பல கோவில்கள் கட்ட வித்திட்டவர். கி.பி 1001 ல் சந்திர மவுலீஸ்வரர் கற்றளியே சேரன்மா தேவி நட்ட கடைசி அடிக்கல் ஆகும். இராஜராஜனின் பிரகதீசுவரர் ஆலயம் இம்மண்ணில் நிலைபெற்றிருக்கும் வரை சோழர்களின் கட்டிடக்கலையை உலகம் மறவாது. இதன் காரணமாகவே அழியாத பெருங்கோவில்கள் என்று சோழர்களின் மூன்று பெரும் கோவில்களும் போற்றப்படுகின்றன. இக்கோவில்களில் ஆயிரம் ஆண்டுகளைத் தாண்டி இன்றும் பூஜைகள், வழிபாடுகள் ஆகியவை சிறப்பாக நடைபெற்றுவருகின்றனபிற்கால சோழ மன்னர்கள் செங்கலால் கட்டப்பட்ட கோட்டங்களை கற்றளிகளாக மாற்றியுள்ளனர். இது போன்ற பணிகளை விக்ரம சோழன் ஆகியோர் செய்துள்ளனர். இதற்கு உதாரணமாக தஞ்சாவூர் இஞ்சிக்குடி கோயில் போன்றவற்றைக் கூறலாம். 

பாண்டியர் காலம்:
கோபுரங்கள் நிறைந்த மீனாட்சி அம்மன் கோவில்

பாண்டியர் கால கட்டிடக்கலைக்கு பிறகே கோவிலின் கோபுரங்கள் முக்கியத்துவம் பெறத் தொடங்கின. கோபுரங்கள் உயரமாக எழுப்பப்பட்டு கோவிலின் வலிமையான கட்டிட அமைப்பாக மாறத் தொடங்கியது. வேறெந்த குறிப்பிட்ட கட்டிடக்கலை வளர்ச்சியினையும், மாற்றத்தினையும் பாண்டியரின் கட்டிடக்கலை நிறுவவில்லை.

நாயக்கர் காலம்:

நாயக்க மன்னர்கள் பெரும்பாலும் முன்பே இருந்த கோவில்களை சீர் அமைக்கும் பணியிலேயே ஈடுபட்டிருந்தனர். நாயக்கர்களும் பாண்டியர்களைப் போலவே கோவில் கோபுரங்களில் குறிப்பிட்ட மாற்றங்களை ஏற்படுத்தினர். நாயக்கர்களின் ஆட்சியின் போதே பத்துக்கும் மேற்பட்ட நிலைகளையுடைய கோவில் கோபுரங்கள் எழுப்பபெற்றன. மேலும் அலங்கார வேலைப்பாட்டுடன் கூடிய மண்டபங்கள் ஆகியவற்றையும் நாயக்கர்கள் கட்டியுள்ளனர்.

அடுத்த பதிவில் சிற்பக்கலையினைப் பற்றியும் அதன் சிறப்புகள் பற்றியும் காண்போம்.